Ads Top

TNPSC CURRENT AFFAIRS IMPORTANT TOPIC FROM 2022 - PART 9

 


புலிக்குத்தி நடுகல் கண்டுபிடிப்பு

  • ஈரோடு மாவட்டம், நம்பியூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் வளாகத்தில், திருப்பூர் வீரராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தினர் ஆய்வு நடத்தினர்.
  • அப்போது, பண்டைய தமிழர் வீரத்தை விளக்கும் வகையிலான நடுகல் கண்டெடுக்கப்பட்டது. பண்டைய தமிழர்கள், கால்நடைகளை பெரும் செல்வமாக போற்றி பாதுகாத்தனர். மாடுகளை பாதுகாக்க கிராமம் தோறும் வீரர்கள் இருந்தனர். 
  • வேட்டையாட வரும் புலியிடம் இருந்து, கால்நடைகளை பாதுகாப்பது இவர்களது கடமையாக இருந்தது. புலிகளுடன் சண்டையிடும்போது, வீரமரணம் எய்தும் வீரர்களுக்கு நடுகல் எழுப்பி, தெய்வமாக வழிபட்டு வந்தனர். 
  • நம்பியூர் கோவில் வளாகத்தில், 80 செ.மீ., உயரம், 65 செ.மீ., அகலம் கொண்ட நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாவீரர் ஒருவர், வலது கையில் ஓங்கிய வாளுடன், இடது கையில் கேடயம் பிடித்தபடி, புலியுடன் சண்டையிடுவது போல் நடுகல் அமைந்து உள்ளது. எழுத்து பொறிப்பு இல்லாத இந்த நடுகல், 600 ஆண்டுகள் பழமையானது என்பதை உறுதி செய்ய முடிகிறது.

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் புதிய காவல் ஆணையம் அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

  • புதிதாக காவல் ஆணையம் ஒன்றைத் தற்போது அமைத்திடவும், அந்தக் காவல் ஆணையத்திற்கு மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் திரு.சி.டி. செல்வம் அவர்களைத் தலைவராகவும், திரு.கா. அலாவுதீன், இ.ஆ.ப., (ஓய்வு), முனைவர் திரு.கே.இராதாகிருஷ்ணன், இ.கா.ப., (ஓய்வு), மனநல மருத்துவர் திரு.சி.இராமசுப்பிரமணியம், மேனாள் பேராசிரியர் முனைவர் திருமதி நளினி ராவ் ஆகியோரை உறுப்பினர்களாகவும், காவல் துறை (குற்றப்புலனாய்வு) கூடுதல் இயக்குநர் திரு. மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களை உறுப்பினர்-செயலராகவும் நியமனம் செய்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
  • இந்த ஆணையம், காவலர்களின் நலன் மற்றும் காவல்துறையின் பல்வேறு அம்சங்களை விரிவாக ஆய்வு செய்து, குறிப்பிட்ட காலவரையறைக்குள் அரசுக்குத் தனது பரிந்துரைகளை அளிக்கும். 
  • காவல்துறையின் செயல்பாடுகளைச் சிறப்பாக மேம்படுத்துவதற்கும், இணையவழிக் குற்றங்களைத் தடுத்திடவும், சேவை வழங்குவதில் மனிதாபிமானத்துடன் கூடிய நட்புறவோடு பொதுமக்களை அணுகுவதற்கும், உரிய நடவடிக்கைகள் மூலமாக காவல்துறையினரின் சேவையை மேலும் வலுவூட்டுவதற்கும், இந்த ஆணையத்தின் பரிந்துரைகள் வழிகாட்டியாகவும், உறுதுணையாகவும் அமைந்திடும் 

வட்டிக்கு வட்டி, 6 மாதங்களுக்கு ஊக்கத்தொகை - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  • கரோனா காலத்தில் வங்கியில் கடன் பெற்றவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்த மார்ச் முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ரிசர்வ் வங்கி அளித்திருந்தது.
  • உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு ரூ.2 கோடி வரை வங்கியில் கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படாது என்று தெரிவித்தது.
  • இந்தநிலையில் குறிப்பிட்ட சில கடன் கணக்குகளின் கீழ் வழங்கப்பட்ட கடன்களுக்கு கூட்டு வட்டிக்கும், சாதா வட்டிக்கும் இடையேயான வித்தியாசத்தை ஊக்கத்தொகையாக 6 மாதங்களுக்கு வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், குறிப்பிட்ட சில கடன் கணக்குகளின் கீழ் (01.03.2020 முதல் 31.08.2020 வரை) வழங்கப்பட்ட கடன்களுக்கு கூட்டு வட்டிக்கும், சாதா வட்டிக்கும் இடையேயான வித்தியாசத்தை ஈடுகட்ட கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகையாக 6 மாதங்களுக்கு ரூ.973.74 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நீல பத்மநாபனின் நாவல் ரஷ்ய மொழியில் மொழிபெயர்ப்பு 

  • திருவனந்தபுரத்தில் வசித்து வரும் எழுத்தாளர் நீல பத்மநாபன் "இலை உதிர்காலம்” என்னும் நாவலுக்காக கடந்த 2007-ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றார். 
  • கடந்த 1970-ஆம் ஆண்டு வெளிவந்த இவரின் "பள்ளிகொண்டபுரம்" என்னும் நாவல் தற்போது ரஷ்ய மொழியில் டாக்டர் லூபா பைச்சினா (Dr. Luba Pichina) என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

துப்புரவுப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளுக்கு நீடிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

  • பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில், இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், துப்புரவுப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் பதவிக்காலத்தை 31.03.2022-க்கு பிறகு 3 ஆண்டுகளுக்கு நீடிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • 3 ஆண்டு கால நீடிப்புக்கான மொத்த செலவு சுமார் ரூ.43.68 கோடியாக இருக்கும். இந்த ஆணையத்தின் பதவிக்காலம் 3 ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுவதால் நாட்டில் உள்ள துப்புரவு தொழிலாளர்களும் மனிதக் கழிவுகளை அகற்றுவோரும் பயன்பெறுவார்கள். 31.12.2021 கணக்கெடுப்பின்படி மனிதக் கழிவுகளை அகற்றுவோர் எண்ணிக்கை 88,098-ஆக இருந்தது.

இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமையில் ரூ 1500 கோடி முதலீட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல்

  • இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமையில் ரூ 1500 கோடி முதலீட்டுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
  • சுமார் 10,200 பணி-வருடங்கள் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும், வருடத்திற்கு சுமார் 7.49 மில்லியன் டன் கரியமில வாயு உமிழ்வைக் குறைக்கவும் இந்த முதலீடு உதவும்.
  • இந்திய அரசு, கூடுதலாக ரூ 1500 கோடி முதலீடு செய்வதன் காரணமாக இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை கீழ்காணும் பலன்களை பெறும்:
  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு ரூ 12000 கோடி கடன் வழங்க முடியும், இதன் மூலம் 3500-4000 மெகாவாட் கூடுதல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திறனுக்கான கடன் தேவை நிறைவு செய்யப்படும்.
  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இந்திய அரசின் இலக்குகளை எட்டுவதற்கு பங்காற்றும் வகையில் அத்துறையின் நிகர மதிப்பை அதிகரித்து கூடுதல் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி திட்டங்களுக்கு கூடுதல் நிதிவசதி ஏற்படும்.
  • கடன் வழங்கும் மற்றும் கடன் பெறும் செயல்பாடுகளுக்கு வசதியளிக்கும் வகையில், மூலதனத்தையும் ஆபத்தையும் சரிபார்த்து மதிப்பீடு செய்த சொத்து விகிதாச்சாரம் மேம்படும்.
  • புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மினி ரத்னா (வகை-1) நிறுவனமான இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கெனத் தனியாக , வங்கி அல்லாத நிதி நிறுவனமாக, 1987-ல் உருவாக்கப்பட்டது.
  • 34 ஆண்டுகளுக்கும் மேலான தொழில்நுட்ப-வணிக நிபுணத்துவம் கொண்ட இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களூக்கான நிதியளிப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட பசுமை எரிபொருட்கள் துறையில் இணைந்து செயல்பட இந்தியா – டென்மார்க் உடன்பாடு

  • பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட பசுமை எரிபொருட்களுக்கான ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியில் கூட்டு முயற்சிகளை மேற்கொள்வதென, இந்தியா - டென்மார்க் நாடுகளின் அறிவியல் & தொழில்நுட்ப கூட்டுக் குழுவின் கூட்டத்தில் இருநாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
  • காணொலி வாயிலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தேசிய அளவிலான முக்கியமான முன்னுரிமை திட்டங்கள் மற்றும் இருநாடுகளிலும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புத் துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, குறிப்பாக பசுமை ஆராய்ச்சி, தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகளில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளில் பசுமைத் திட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
  • ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளை ஒரு இயக்கமாக இருதரப்பு ஒத்துழைப்பு மூலம் மேற்கொள்ள இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 
  • இரு நாடுளின் பிரதமர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பசுமை செயல்திட்ட ஒத்துழைப்புக்கான, 2020-25 செயல் திட்டத்தில் ஒப்புக்கொண்டபடி, பருவநிலை மாற்றம், பசுமைத் திட்டங்களுக்கு மாற்றம், எரிசக்தி, தண்ணீர், கழிவு, உணவு போன்ற துறைகளில் கூட்டாக செயல்பட வலியுறுத்தப்பட்டது.
  • இந்தக் கூட்டத்திற்கு மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் சர்வதேச ஒத்துழைப்பு பிரிவு ஆலோசகர் மற்றும் தலைவர் திரு எஸ் கே வர்ஷ்னீ மற்றும் டென்மார்க் அரசின் உயர்கல்வி மற்றும் அறிவியல் முகமையின் துணை இயக்குநர் டாக்டர் ஸ்டைன் ஜோர்ஜென் சென் ஆகியோர் கூட்டாக தலைமை வகித்தனர்.

ரிட்டன் ஆஃப் மிலன்

  • இந்திய கடற்படை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தும் பலதரப்புப் பயிற்சியான மிலன், 2020 இல் கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது. 
  • ஆனால், இம்முறை கொரோனா பாதிப்பு அதிகளவில் இருந்தாலும், மிலனை நடத்திட கடற்படையினர் தீவிரமாக உள்ளனர். மிலன் 2022 மிகப்பெரிய அளவில் நடத்திட திட்டமிட்டுள்ளனர். சுமார் 45 நாடுகள் பங்கேற்கவுள்ளனர்.
  • இது'தோழமை-ஒற்றுமை-ஒத்துழைப்பு' என்ற கருப்பொருளுடன் பிப்ரவரி கடைசி வாரத்தில் பயிற்சி விசாகப்பட்டினத்தில் தொடங்கவுள்ளது. 
  • பயிற்சியின் இறுதி திட்டமிடல் மாநாடு டெல்லியில் நடைபெறும். இதில் பங்கேற்கும் நாடுகளின் ராணுவ பிரதிநிதிகள் நிகழ்வில் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழடி, சிவகளை, கங்கைகொண்ட சோழபுரம் உட்பட தமிழகத்தில் 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வு பணிகள் பிப்ரவரியில் தொடங்கும் என்று முதல்வர் அறிவிப்பு

  • கங்கைச் சமவெளியில் கி.மு.6-ம் நூற்றாண்டில் இருந்த நகரமயமாக்கம் தமிழகத்தில் இல்லை என்றும், பிராமி எழுத்து மவுரியர் தோற்றுவித்தது என்றும் இதுவரை கருதுகோள்கள் இருந்தன. அத்தகைய கருத்துகளுக்கு அறிவியல்பூர்வமாக விடை அளித்துள்ளது கீழடி ஆய்வு. 
  • தமிழகத்தில் கி.மு.6-ம் நூற்றாண்டிலேயே நகரமயமாக்கம் ஏற்பட்டிருந்ததும், படிப்பறிவு, எழுத்தறிவு பெற்ற மேம்பட்டசமூகமாக விளங்கியதும் கீழடிஅகழாய்வு மூலம் நிலைநிறுத்தப்பட்டது.
  • சிவகளை முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட உமி நீங்கிய நெல்மணிகளின் காலம் கி.மு 1150 என கண்டறியப்பட்டுள்ளது. 'தண் பொருநை' என்ற தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இதை சட்டப்பேரவையில் கடந்த 2021 செப்டம்பர் மாதம் அறிவித்தேன்.
  • இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி, வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் வரலாற்றுக்காலம் வரையிலான தொல்லியல் இடங்களில் அகழாய்வு செய்யதிட்டமிடப்பட்டுள்ளது. 
  • பண்டைய தமிழ் சமூகத்தின் தொன்மை, பண்பாடு, விழுமியங்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தற்போது 2022-ம் ஆண்டில் 7 இடங்களில் அகழாய்வுகள் செய்யப்பட உள்ளன.
  • அதன்படி, கீழடி மற்றும் அதைசுற்றியுள்ள இடங்களில் (கொந்தகை, அகரம், மணலூர்) 8-ம் கட்டமாகவும், சிவகளையில் 3-ம் கட்டமாகவும், கங்கைகொண்ட சோழபுரம், மயிலாடும்பாறையில் 2-ம்கட்டமாகவும் அகழாய்வு பணிகள்நடக்க உள்ளன. வெம்பக்கோட்டை, துலுக்கர்பட்டி, பெரும்பாலையில் முதல்முறையாக அகழாய்வு நடக்க உள்ளது.
  • தண் பொருநை (தாமிரபரணி) ஆற்றின் முகத்துவாரத்துக்கு எதிரேகடற்கரையோர முன்கள புலஆய்வு மேற்கொள்ள தமிழக தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது. 
  • முதல்கட்டமாக, சங்ககால கொற்கை துறைமுகத்தின் தொல்லியல் வளத்தை கண்டறியும் நோக்கில், கடலோரங்களில் ஆய்வு மேற்கொள்ள இந்திய கடலாய்வு பல்கலைக்கழகம், தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து கடல் ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
  • அகழாய்வு பணிகள் வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பர் இறுதி வரை நடக்க உள்ளன. இதற்காக வரவு - செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள ரூ.5கோடி நிதியில் இருந்து இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதனை

  • ஒடிஷா மாநிலம் சண்டிபூரில் உள்ள ஏவுதளத்திலிருந்து பிரமோஸ் ஏவுகணை செலுத்தப்பட்டதாகவும் அது துல்லியமாக பாய்ந்து இலக்கை அழித்ததாகவும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான DRDO தெரிவித்துள்ளது.
  • பிரமோஸ் ஏவுகணை ஏற்கனவே வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டிருந்தாலும் தற்போது நவீன தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டு சோதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து உருவாக்கியுள்ள பிரமோஸ் ஏவுகணை கப்பலையும் நிலப்பகுதியையும் தாக்கும் வகையில் இரு வகைகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
  • மேம்படுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை தற்போது நிலப்பகுதியிலிருந்து செலுத்தப்பட்ட நிலையில் அண்மையில் கடலில் இருந்து ஏவி சோதிக்கப்பட்டிருந்தது. பிரமோஸ் ஏவுகணை ஏற்கனவே இந்திய ராணுவத்திடமும் கடற்படையிடமும் செயல்பாட்டில் இருந்து வரும் நிலையில் இனி அதன் மேம்பட்ட வடிவம் சேர்க்கப்பட உள்ளது

ஜனவரிக்கு ரூ.95,082 கோடி மாநிலங்களுக்கு வரி பகிர்வு, தமிழகத்துக்கு ரூ.3,878.38 கோடி

  • மாநிலங்களுக்கு வரி பகிர்வின் முன் தவணையாக, ரூ.47,541 கோடி விடுவிக்க ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்புதல் அளித்துளார். இது, ஜனவரி மாதத்துக்கு விடுவிக்கப்படும் வழக்கமான பகிர்வுக்கு கூடுதலாக வழங்கப்படுகிறது. இதன் மூலம், மாநில அரசுகள் ரூ.95,082 கோடி பெற்றுள்ளன.
  • இது ஜனவரி மாத வரவை விட இரண்டு மடங்கு அதிகம். இதில், தமிழகத்துக்கு ஜனவரி மாத தவணையாக ரூ.1,939.19 கோடி, முன் தவணையாக ரூ.1,939.19 கோடி என மொத்தம் ரூ.3,878.38 கோடி வழங்கப்படுகிறது. 
  • அதிகபட்சமாக உத்தர பிரதேசத்துக்கு மொத்தம் ரூ.17,056.66 கோடி, கர்நாடகாவுக்கு ரூ.3,467.62 கோடி, கேரளாவுக்கு ரூ.1,830.38 கோடி, மகாராஷ்டிராவுக்கு ரூ.6,006.30 கோடி வழங்கப்பட்டுள்ளது. 

நாட்டின் பொருளாதார வளர்ச்சி இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு

  • நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அடுத்த நிதியாண்டில் 7.6 சதவீதமாக இருக்கும் என, 'இந்தியா ரேட்டிங்ஸ் அண்டு ரிசர்ச்' நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின், இந்திய பொருளாதாரம் நல்ல விரிவாக்கத்தை காட்டியுள்ளதாகவும், ரியல் ஜி.டி.பி., எனும், நிலையான மொத்த உள்நாட்டு உற்பத்தி, கொரோனாவுக்கு முந்தைய நிலையை விட அதிகமாக, 9.1 சதவீதமாக அதிகரித்து இருக்கும் என்றும், இந்தியா ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.
  • நடப்பு நான்காவது காலாண்டில், ஒமைக்ரான் தாக்கம் எதிர்பார்ப்பை விட அதிகம் இருப்பின், அது அடுத்த நிதியாண்டுக்கான ஒப்பீட்டில், சிறிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.
  • மேலும், அரசும், ரிசர்வ் வங்கியும் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.
  • இந்த மாதத்தின் துவக்கத்தில், தேசிய புள்ளியியல் அலுவலகம், நடப்பு நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.2 சதவீதமாக இருக்கும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மொரீசியஸில் வீடுகள், சிவில் சர்வீஸ் கல்லூரி, 8 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டம் - பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மொரீசியஸ் பிரதமர் பிரவிந்த் ஜகுநாத் கூட்டாக தொடங்கி வைத்தனர்

  • மொரீசியஸில் சமூக வீட்டு வசதி திட்டத்தை, பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் மொரீசியஸ் பிரதமர் திரு பிரவிந்த் குமார் ஜகுநாத் ஆகியோர் இன்று கூட்டாக தொடங்கி வைத்தனர். இந்தியா மற்றும் மொரீசியஸ் இடையேயான வளர்ச்சி கூட்டுறவின் ஒரு பகுதியாக இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 
  • இந்நிகழ்ச்சியில், சிவில் சர்வீஸ் கல்லூரி மற்றும் 8 மெகா வாட் சூரிய மின்சக்தி கட்டுமான திட்டங்களுக்கும் இரு பிரதமர்களும் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினர். இந்நிகழ்ச்சி மொரீசியஸில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், மொரரீசியஸ் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் காணொலி காட்சி மூலம் நடந்தது.
  • இன்றைய நிகழ்ச்சியில் இரண்டு முக்கிய இருதரப்பு ஒப்பந்தங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. மெட்ரோ எக்ஸ்பிரஸ் மற்றும் இதர உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக , மொரீசியஸ் அரசுக்கு 190 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும சிறு வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தானது.

சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டுப் பெருவிழாவிலிருந்து தங்க இந்தியாவை நோக்கி' என்பது குறித்த தேசிய விழாவைப் பிரதமர் தொடங்கிவைத்து முக்கிய உரையாற்றினார்

  • சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டுப் பெருவிழாவிலிருந்து தங்க இந்தியாவை நோக்கி' என்பது குறித்த தேசிய விழாவைத் தொடங்கிவைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி முக்கிய உரை நிகழ்த்தினார். பிரம்ம குமாரிகளின் ஏழு முன்முயற்சிகளையும் அவர் தொடங்கிவைத்தார்.
  • மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா, ராஜஸ்தான் ஆளுநர் திரு கல்ராஜ் மிஸ்ரா, ராஜஸ்தான் முதலமைச்சர் திரு அசோக் கெலாட், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், மத்திய அமைச்சர்கள் திரு ஜி.கிஷன் ரெட்டி, திரு பூபேந்திர யாதவ், திரு அர்ஜுன் ராம் மெக்கால், திரு பர்ஷோத்தம் ரூபாலா திரு கைலாஷ் சவுத்ரி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

2021 டிசம்பர் மாதத்திற்கான வேளாண் மற்றும் ஊரகத் தொழிலாளர்கள் சார்ந்த அகில இந்திய நுகர்வோர் குறியீட்டு எண்கள்

  • 2021 டிசம்பர் மாதத்திற்கான வேளாண் மற்றும் ஊரகத் தொழிலாளர்கள் சார்ந்த அகில இந்திய நுகர்வோர் குறியீட்டு எண் தலா 5 புள்ளிகள் உயர்ந்து, வேளாண் தொழிலாளர்களுக்கு 1097-ஆகவும், ஊரகத் தொழிலாளர்களுக்கு 1106 ஆகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
  • வேளாண் தொழிலாளர்களுக்கான குறியீட்டு எண்ணின் வரிசையில் 1290 புள்ளிகளுடன் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. 861 புள்ளிகளுடன் இமாச்சலப் பிரதேசம் கடைசி இடத்தில் உள்ளது.
  • ஊரகத் தொழிலாளர்களுக்கான குறியீட்டு எண்ணின் பட்டியலில் 1276 புள்ளிகளுடன் தமிழ்நாடு முதலிடத்திலும், 915 புள்ளிகளுடன் இமாச்சலப் பிரதேசம் கடைசி இடத்திலும் உள்ளன.
  • விவசாயம் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களில் அதிகபட்ச அதிகரிப்பு தமிழ்நாட்டில் (தலா 20 புள்ளிகள்) ஏற்பட்டுள்ளது. 
  • முக்கியமாக காய்கறிகள் மற்றும் பழங்கள், வெங்காயம், பச்சை/காய்ந்த மிளகாய், புளி போன்றவற்றின் விலை உயர்வு இதற்கு காரணமாகும்.
  • கோதுமை, பருப்பு வகைகள், வெங்காயம், காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றின் விலை வீழ்ச்சியின் காரணமாக, விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களில் அதிகபட்சமாக சரிவை இமாச்சலப் பிரதேசம் (முறையே 12 புள்ளிகள் மற்றும் 14 புள்ளிகள்) சந்தித்துள்ளது.

ஒருநாள் போட்டி - இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா

  • இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற புள்ளிக்கணக்கில் தென்னாப்பிரிக்கா அணி தொடரை கைப்பற்றியது. 
  • இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியின் முதல்போட்டி கடந்த 19ம் தேதி நடைபெற்றது. இதில், 31 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.
  • இதையடுத்து இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜோகனர்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 85 ரன்களை குவித்தார். 
  • பின்னர் களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணி 48 புள்ளி 1 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க ஆட்டகாரர் மாலன் 91 ரன்கள் குவித்தார். 
  • 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற தென்ஆப்பிரிக்க அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

No comments:

Powered by Blogger.